பனித்துளி - The Dew Drop


கட்டளைகளை தின்றுத் தின்றுக் கட்டங்களை நிறைக்கிறது கணினி. உயிர்வாழ்வதை உறுதிப்படுத்தி கொள்ள, கருத்த இருள்திரையிலிருந்து கொஞ்சம் வெளியே வருகிறேன் . முயற்சிக்கிறேன் cltr+z. பின்னோக்கி செல்லவில்லை எதுவும். ஹ்ம்ம்ம்.. நிஜவுலகில் தான் இருக்கிறேன். i-google இல் சிக்கிய ஒரு சின்ன கதை. Peter Hughes என்பவரின் 'The Dew Drop ' (பனித்துளி). அருமையான தத்துவங்கள் பொதிந்த அழகிய ஆக்கம். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதற்கமைய தமிழில் பெயர்க்கிறேன்.

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இந்த கதை பல இடங்களில் மூலத்திலிருந்து வேறுபடுகிறது. கதையின் போக்கும், நடையும் எனக்கே உரித்தான பாணிக்கு மாற்றுவதற்கென சில உள்ளீடுகளும் சில வெளிச்சேர்க்கைகளும் இடம்பெற்றிருக்கிறது.


பனித்துளி - The  Dew  Drop 

    சூரியச்செங் கதிர்கள் பட்டு ஒரு பனித்துளி தன் இருப்பை உறுதிசெய்து கொள்கிறது. ஒரு இலையில் குந்திக் கொண்டு சூரியக் காதலன் அனுப்பும் பறக்கும் கதிர் முத்தங்களை சேகரித்து மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பியவண்ணம்.. தன்னை பற்றி, தன் உள்ளடக்கம் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறது. தன்னை சுற்றி இன்னும் சின்னச் சின்ன பனிக் குழந்தைகள்; சில தான் இருக்கும் அதே இலையிலும் இன்னும் சில வேறு இலைகளிலும். ஆனாலும் ஏனையவற்றை விடவும் தானே சிறப்பானதென்பதில் உறுதியாய் இருக்கிறது பனித்துளி.

ஹ்ம்ம்.. பனித்துளியாய் இருப்பது சிறந்ததே..

Tear drop, Kavithaiமெலிதாய் காற்று செடியை சீண்ட,. சீண்டலில் செடியும் குலுக்கம் காண்கிறது . என்ன அகோரம்.. காற்றின் வன்முறையில் இலையின் நுனிவரை இடம்பெயர்கிறது பனித்துளி. .

ஏன்? ஏன் இந்த கொடுமை? இருந்த இடம் சௌகரியமாய்த் தானே இருந்தது? இருந்த இடம் பாதுகாப்பாய் தானே இருந்தது? இருக்க, ஏன் இவையெல்லாம் மாற்றம் காண வேண்டும். ஏன்? ஏன்?

இலையின் நுனியில் பனித்துளி. பயங்கரமான தருணம் இது. கீழே விழுந்தால் சுக்குநூறாய் நொறுங்கப் போவது நிச்சயம். அதுவே முடிவு என்பதும் நிச்சயிக்கப்பட்ட உண்மை. இப்போது தான் அழகாய் தொடங்கியது வாழ்நாள், அதற்குள் முடிவுறப் போகிறதே! இது அர்த்தமற்ற அநியாயம். தன்னால் முடிந்தளவு இலையை பற்றிப் பிடித்துக் கொள்ள துணிவோடு முயற்சிக்கிறது பனித்துளி. ஆனாலும்.. பயனில்லை.

இறுதியில், நடப்பது நடக்கட்டும் என முடிவெடுத்ததோ என்னவோ, புவியீர்ப்பிடம் சரணடைந்தது பனித்துளி. கீழே.. இன்னும் கீழே செல்லச் செல்ல தன் விம்பம் தெரியக் காண்கிறது. தனதே தனதான ஒரு விம்பம் தன்னை நோக்கி வருவதை உணர்கிறது பனித்துளி. நெருங்க... நெருங்க...நிஜமும் விம்பமும் ஒன்றை ஒன்று சேர்கிறது.

ஹ்ம்ம்... முடிவில், சின்ன பனித்துளி குளத்தில் மூழ்கிப்போனதோடு அந்த அகோரம், பயம் இன்பமாய் பரிணாமம் பெறுகிறது. இனிமேலும் அந்த சின்ன பனித்துளி இல்லை. இல்லாமையின் எல்லையை நோக்கி அது பயனித்துவிட்டது. ஆனாலும் அது இறந்து போகவில்லை.
முழுமையான ஒரு குளத்தின் அங்கமாய் தன்னையும் சேர்த்துக் கொள்கிறது.

-ஜாவிட் ரயிஸ்




Jawid Raiz Blogger
Latest post:
தாண்டிவந்த தடங்களில் சிலதையேனும் அழித்து விட முடியுமெனின் - இன்று தாங்கிக்கொண்டிருக்கும் வலிகளில் பாதியேனும் குறைந்திருக்கும்
www.tamilpoetry.com
  Like · Comment · Share என் மௌனம் பேச நினைக்கிறது page on Facebook     Like
 
Facebook Twitter LinkedIn Flickr YouTube
 

தொலைத்த கண்ணீரும், மீட்டெடுத்த சந்தோஷமும்




Diary
Page Number 2

நீண்டதொரு இடைவெளியின் பின்னர் என் நாளேட்டின் இரண்டாவது பக்கம் புரட்டப்படுகிறது. முதல் பக்கம் எழுதிய என்னில் இரண்டாம் பக்கத்துக்கு வருவதற்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. சுருக்கமாக சொன்னால், முதல் பக்கம் எழுதும் போது சோகம், கண்ணீர், இழப்புகள் என்பனவே என் வாழ்வின் உள்ளடக்கங்களாக இருந்தது. "ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது?", "ஏன் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்?" "ஏன் என்னால் மட்டும் முடியாதிருக்கிறது?" இந்த கேள்விகளை வைத்துக்கொண்டு குமுறிக்கொண்டிருந்த இதயம், தேடலில் தொலைத்த கண்ணீரையும் மீட்டெடுத்த சந்தோஷத்தையும் பற்றி பேசுகிறது இந்த பதிவு:


மழைக் குருவிகளுக்கு நிழலாய் உயரப் பரந்த மேகங்கள்,
குளிக்கப் போகும் களிப்பில் குதூகலிக்கும் மரங்கள்,
மௌனத்தின் சூழ்ச்சியில் மரணித்தாட்போல் உலகம், 
ஒப்பாரி வைக்க ஓரிரு காக்கை குழந்தைகள்.

    அழுதாலும் களித்தாலும் உலகம் அழகாய்த் தான் இருக்கிறது.என் உலகம் இவ்வளவு அழகானது எப்படி? கண்ணீர் உற்பத்தி செய்த இந்த கண்களில் இன்று சந்தோசம் குடிவந்ததெப்படி?

       முன்பெல்லாம்  அலுவலகம் போகும் வழியில் அழுக்கு உடையில் பழுத்த பிச்சைக்காரியின் புளித்த குரலில் என் நாட்கள் அழுக்காகிவிடுவதாக நினைப்பேன்.இன்று அவள் கைகளில் கண்மூடி சிரிக்கும் மழலையின் முறுவலில் ஆரம்பிக்கும் நாட்கள் மிகவும் அழகாக மாறுகிறது. தனிமை, வெறுமை என்று தவித்திருந்த இதயம் தனிமையிலும் இனிக்கிறது.முகவரியே தெரியாத வண்டுகளிடம் கற்பை பரிகொடுக்குதே என்று பூக்களை கண்டாலும் அசிங்கமாய் எண்ணிய உள்ளம் இப்போதெல்லாம்  பூக்களினதும் வண்டுகளினதும் சில்மிஷக் காதல் கண்டால்  பூரிக்கிறது. என்னை விரும்புவரை மட்டும் விரும்பிய  நெஞ்சம் எதிர்பவரையும் ஏற்றுக்கொள்கிறது.

எச்சமே இல்லாதபடி கருமை நீங்கியது.
எங்கும் வெள்ளை! 
அனைத்தும் புனிதம்! 
எதுவும் அழகு!

அலாவுதீனின் விளக்கில் உரசிக் கிடைத்ததல்ல, இந்த மகிழ்ச்சி.  "'சந்தோஷம்... துக்கம்... சோகம்... தனிமை... எல்லாவற்றையும் என் மனது தான் முடிவு செய்கிறது" . இந்த புரிந்துணர்வில் பிறந்தது தான் இவை அனைத்தும்.

"Being happy doesn't mean that everything is perfect. It means that you've decided to look beyond the imperfections."

"சந்தோஷம் என்பது எல்லாவற்றிலும் முழுநிறைவு அடைவது என்பதல்ல.  அது குறைகளுக்கு அப்பால் சிந்திக்க நினைக்கும் மன உறுதி"

அந்த உறுதி இப்பொழுது என் மனதுக்குள் குடிகொண்டு விட்டது. சிரிப்பு என்பது சந்தோஷம். ஆக, சிரிப்பை தேடி தொடங்கியது என் தேடல். அழுவதற்காக காரணம் தேடுவதை விட்டு சிரிப்பதற்காக காரணம் தேடினேன். "Be possitive, smile" என்று கையடக்க தொலைபேசியின் பின்னணி படத்தில் பொதித்து அடிக்கடி எனக்குள் நானே நினைவூட்டி கொண்டேன். என் வாழ்வில் நான் நினைத்திராத அளவு சந்தோஷமும், சிரிப்பதற்கான சந்தர்ப்பங்களும் இருப்பதை ஓரிரு மாதங்களுக்குள்  புரிந்துகொண்டேன்.

எனக்கு உற்சாகம் தரவும், ஆறுதல் சொல்லவும் என்னிலும் விஞ்சியவர்கள் யாருமில்லை என்பதை புரிந்துகொண்டேன். எனக்கு நானே ஆறுதல் சொன்னேன்.

நான் எல்லாவற்றிலும் பூரணமாகவில்லை. ஆனாலும் என் வாழ்வில் நிறையவே சந்தோஷம் இருக்கிறது.

உண்மையான நண்பனிடம் நட்பை ரசிக்கிறேன். 
முகமூடி போட்டுக்கொண்டவனிடம் நடிப்பை ரசிக்கிறேன். 

இலக்குகளுக்கான பாதையில் நடக்கிறேன். 
அடைய முடிந்தால் என் அடைவில் களிப்பேன்.
தடைகள் வருகையில் அனுபவப் பைக்கு உள்ளடக்கம் கிடைத்ததென்று களிப்பேன்.

என்னை துரத்தியடித்த விதியே... உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் துரத்து... நான் மீண்டும் திரும்புவேன் எனக்கே உரித்தான என் இலக்கை... என் வாழ்கையை தேடி.

-ஜாவிட் ரயிஸ்



Jawid Raiz Blogger
Latest post:
தாண்டிவந்த தடங்களில் சிலதையேனும் அழித்து விட முடியுமெனின் - இன்று தாங்கிக்கொண்டிருக்கும் வலிகளில் பாதியேனும் குறைந்திருக்கும்
www.tamilpoetry.com
  Like · Comment · Share என் மௌனம் பேச நினைக்கிறது page on Facebook     Like
Facebook Twitter LinkedIn Flickr YouTube
 


கேள்வி

எழுதிய எழுதிய
எல்லாக் கவிதையையும்
எனக்கு அனுப்பினாலும்

எதிர்பார்த்திருந்த
ஒரே கவிதை
அவளுக்கு போனது எப்படி? 



மூலம்: முதுபபா (මුතු පබා)
தமிழில் : ஜாவிட் ரயிஸ்




காதல் பொறி

Takk...Thanks...Gracias...Danke...Obrigado...Grazie...Multumesc...Merci
தூண்டிலை விழுங்கிய மீனாய்
துடி துடிக்கிறது இருதயம்
உன் காதலில் சிக்கிக்கொண்டு

விழுங்க முடியாமலும்
விடுவித்துக் கொள்ள தெரியாமலும்

-ஜாவிட் ரயிஸ்


காதல் மீள்நிரப்பு - Love Reload

Photobucket

மீள்நிரப்பு அட்டை உண்டோ
காதலுக்கு
குறைந்ததும் நிரப்பிக்கொள்ள?


-ஜாவிட் ரயிஸ்



 

காதல் சுவடு

Haley and Michael
உட்சுவாசத்தில் ஆக்சிஜன் உட்செல்வதாயும் வெளிச்சுவாசத்தில் காபனிரொட்சைடு வெளிவருவதையும் விளக்கியது விஞ்ஞானம்;

இருசுவாசத்திலும் வெளிவராமல் குருதி அணுக்களுக்குள் குந்திக்கொண்டிருக்கும் காதலை, காதலின் தேசிய மொழியாம் கவிதையில் சொல்கிறது இந்த குறும்படம்.

நான் சுவைத்தது , உங்கள் சுவை நரம்புகளையும் கொஞ்சம் தீண்டட்டும்.








காத்திருப்பு



ஒளியிழந்து நிலவு,
மௌனத்தில் ஆகாயம்,
உறக்கத்தின் மடியில்
உறைந்து போன உலகம்

தொலைதூரப் பள்ளத்தாக்குகளில்
தாழ்ந்து
மலைமுகடுகளை முத்தமிடும்
பால்நிறத்து முகில்கள்;
நிறைவேறா வேட்கைகளை
இதயத்தில்  ஏந்தியபடி
தொடர்ந்தும் தொடரும் என் காத்திருப்புகள்

இந்த இளவேனிலின் சாயலில் வந்துவிடு
யாருக்கு தெரியும்,
எத்தனை காலம் இந்த காதல் தொடரும்
யாருக்கு தெரியும்,
எத்தனை காலம் இந்த துரதிஷ்டசாலியின் வாழ்வில்
சோக நிழல்கள் தொடரும்

இந்த தாரகைகள், எப்பொழுதும் போல
தூசுபடிந்து போய்விடக்கூடாது,
வா, உன் ஏக்கத்தில் விழித்திருக்கும் இந்த விழிகளுக்கு
ஓரிரவாவது உறக்கம் வேண்டும்

ஒளியிழந்து நிலவு,
மௌனத்தில் ஆகாயம்,
உறக்கத்தின் மடியில்
உறைந்து போன உலகம்

 


உருது மொழிக் கவிஞன் Sahir Ludhianvi யின் intizaar என்ற கவிதையின் 99% தழுவல். (கவிதையின் கட்டமைப்பிலும், சொற்கையாளுகையிலும்  உள்ள வேறுபாட்டினாலும்  'மொழி பெயர்ப்பு' என்ற வார்த்தையை தவிர்த்திருக்கிறேன். )

-ஜாவிட் ரயிஸ்

விதியின் ஊஞ்சல்

Photobucket


விழிகளுக்கும் இமைகளுக்கும்
மத்தியில்
விதியின் ஊஞ்சல்...
இமைக்கும் நொடிக்குள் நூறுமுறை
ஆடி ஓய்கிறது

எதிர்பார்க்கை நூலில்
எழுந்து உயரும் பட்டம்,
அறுக்கப்பட்ட நூலோடு
நிர்வாணமாய்..

சாளரங்கள் திறந்தும்
சாலைகள் மூடப்பட்டும்;
எலிகளின் ஆட்சிக்கு மட்டுமாய்
சோபனை தெருக்கள்

வெடிகுண்டுகளோடு வரவேட்பறைகள்
வேர்களை இழந்த வேதாந்தங்கள்
சுண்டிவிடப்படும் பக்கத்துக்கு
சரிந்து விழும் சித்தாந்தங்கள்

இதழ்களில் சிரித்து
இருதயத்தில் நாண் ஏற்றும்
செயற்கை மானுடம்

களவெடுப்பவனுக்கு காலாண்டு சிறை
கண்ணீர் விடுபவனுக்கு ஆயுள் தண்டனை
கால்போன இடமெல்லாம்
காற்றுவாங்கப் போகும் சட்டங்கள்

சமுதாய சந்தையில் பொதுநலம் விற்று
சுயநலம் வாங்க வேண்டும்
தொழிலில் தேர்ந்தவர்  சொன்னார்
"பொதுநலத்தை விட சுயநலத்துக்கு
கிராக்கி " இருக்கிறதாம்!


-ஜாவிட் ரயிஸ்



.

நிலையாமை

tamil kavithai, kavithai

தங்கியிருந்த மழைத் துளிகள் எத்தனையோ
தன்னிச்சையாய் பிரிகையிலும்
தளராத கல் நெஞ்சு
இந்தத் துளியின் பிரிவில் மட்டும்
இடிந்து போவது ஏனோ?



தவறு எங்கிருக்கிறது?
என்னிலா? உன்னிலா?
முள்ளந்தண்டு வில்லாகி
இரத்தக் குழாய்கள் நானாகி
உஷ்ணக் காற்றை நாணேற்றி
விடையில்லா
கேள்விகள்  தொடுக்க...


 

நானில்லை என்று
என் ஆணவமும்
நீயில்லை என்று
அசரீரியாய் ஒரு குரலும்
மாறி மாறி போர் தொடுக்க
கள்ளமில்லா இதயங்கள்
சல்லடையாய் உடைந்து நொறுங்க..

மயான அமைதி
மனதெங்கும் நிலைக்கிறது



மீண்டும் கேள்வி!
மீண்டும் போர்!
மீண்டும் அமைதி...
மீண்டும் கேள்வி!



மீண்டும் ஒரு முறை
இதயம் நொறுங்கும் முன்
விடையை தேட வேண்டும்

நிலையாமையே  நிலைத்ததென்று
புரிந்துகொள்ளாதது தான்
நான் இழைத்த பிழையோ?
 
  -ஜாவிட் ரயிஸ்



.

ஏன்?

Seventeen - Lost
நிலவை பிரிந்து வானம் விழவில்லை;
நதியை பிரிந்து கரையும் அழவில்லை;
உன்னை பிரிந்த நான் மட்டும் ஏன்?

வண்டுக்கு மலரில் இல்லாத மோகம்;
வேருக்கு நீரில் இல்லாத தாகம்;
எனக்கு மட்டும் உன்னில் ஏன்?


அனலாய் சுட்ட உன் வார்த்தைகளை
ஏன் இதயம்
சிதறாமல் சேகரிப்பது ஏன்?

தணலாய் கொதிக்கும்
உன் கோபத்தை
எட்டியிருந்து ரசிப்பதும் ஏன்?


விட்டுக்கொடுக்கவும் முடியாமல்
விட்டுப்போகவும் இயலாமல் - நெஞ்சம்
தட்டுத் தடுமாறி தவிப்பது ஏன்?

எட்டிப்பிடிக்கவும் முடியாத உன்னை
கட்டிப்பிடிக்க நினைத்து - நானும்
பெட்டிப் பாம்பாய் அடங்குவது ஏன்?


சுக்கு நூறாய் உடைந்த பின்னும்
சட்டென்று ஒட்டிக்கொண்டு
உனக்காய் உருகும் உயிரும் ஏன்?

வேண்டும் என்று இதயம் முனுமுனுக்க
வேண்டாம் என்று போலியாய்
அடிக்கடி உளறும் உதடுகள் ஏன்? 

       -ஜாவிட் ரயிஸ்


.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More