பனித்துளி - The Dew Drop


கட்டளைகளை தின்றுத் தின்றுக் கட்டங்களை நிறைக்கிறது கணினி. உயிர்வாழ்வதை உறுதிப்படுத்தி கொள்ள, கருத்த இருள்திரையிலிருந்து கொஞ்சம் வெளியே வருகிறேன் . முயற்சிக்கிறேன் cltr+z. பின்னோக்கி செல்லவில்லை எதுவும். ஹ்ம்ம்ம்.. நிஜவுலகில் தான் இருக்கிறேன். i-google இல் சிக்கிய ஒரு சின்ன கதை. Peter Hughes என்பவரின் 'The Dew Drop ' (பனித்துளி). அருமையான தத்துவங்கள் பொதிந்த அழகிய ஆக்கம். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதற்கமைய தமிழில் பெயர்க்கிறேன்.

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இந்த கதை பல இடங்களில் மூலத்திலிருந்து வேறுபடுகிறது. கதையின் போக்கும், நடையும் எனக்கே உரித்தான பாணிக்கு மாற்றுவதற்கென சில உள்ளீடுகளும் சில வெளிச்சேர்க்கைகளும் இடம்பெற்றிருக்கிறது.


பனித்துளி - The  Dew  Drop 

    சூரியச்செங் கதிர்கள் பட்டு ஒரு பனித்துளி தன் இருப்பை உறுதிசெய்து கொள்கிறது. ஒரு இலையில் குந்திக் கொண்டு சூரியக் காதலன் அனுப்பும் பறக்கும் கதிர் முத்தங்களை சேகரித்து மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பியவண்ணம்.. தன்னை பற்றி, தன் உள்ளடக்கம் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறது. தன்னை சுற்றி இன்னும் சின்னச் சின்ன பனிக் குழந்தைகள்; சில தான் இருக்கும் அதே இலையிலும் இன்னும் சில வேறு இலைகளிலும். ஆனாலும் ஏனையவற்றை விடவும் தானே சிறப்பானதென்பதில் உறுதியாய் இருக்கிறது பனித்துளி.

ஹ்ம்ம்.. பனித்துளியாய் இருப்பது சிறந்ததே..

Tear drop, Kavithaiமெலிதாய் காற்று செடியை சீண்ட,. சீண்டலில் செடியும் குலுக்கம் காண்கிறது . என்ன அகோரம்.. காற்றின் வன்முறையில் இலையின் நுனிவரை இடம்பெயர்கிறது பனித்துளி. .

ஏன்? ஏன் இந்த கொடுமை? இருந்த இடம் சௌகரியமாய்த் தானே இருந்தது? இருந்த இடம் பாதுகாப்பாய் தானே இருந்தது? இருக்க, ஏன் இவையெல்லாம் மாற்றம் காண வேண்டும். ஏன்? ஏன்?

இலையின் நுனியில் பனித்துளி. பயங்கரமான தருணம் இது. கீழே விழுந்தால் சுக்குநூறாய் நொறுங்கப் போவது நிச்சயம். அதுவே முடிவு என்பதும் நிச்சயிக்கப்பட்ட உண்மை. இப்போது தான் அழகாய் தொடங்கியது வாழ்நாள், அதற்குள் முடிவுறப் போகிறதே! இது அர்த்தமற்ற அநியாயம். தன்னால் முடிந்தளவு இலையை பற்றிப் பிடித்துக் கொள்ள துணிவோடு முயற்சிக்கிறது பனித்துளி. ஆனாலும்.. பயனில்லை.

இறுதியில், நடப்பது நடக்கட்டும் என முடிவெடுத்ததோ என்னவோ, புவியீர்ப்பிடம் சரணடைந்தது பனித்துளி. கீழே.. இன்னும் கீழே செல்லச் செல்ல தன் விம்பம் தெரியக் காண்கிறது. தனதே தனதான ஒரு விம்பம் தன்னை நோக்கி வருவதை உணர்கிறது பனித்துளி. நெருங்க... நெருங்க...நிஜமும் விம்பமும் ஒன்றை ஒன்று சேர்கிறது.

ஹ்ம்ம்... முடிவில், சின்ன பனித்துளி குளத்தில் மூழ்கிப்போனதோடு அந்த அகோரம், பயம் இன்பமாய் பரிணாமம் பெறுகிறது. இனிமேலும் அந்த சின்ன பனித்துளி இல்லை. இல்லாமையின் எல்லையை நோக்கி அது பயனித்துவிட்டது. ஆனாலும் அது இறந்து போகவில்லை.
முழுமையான ஒரு குளத்தின் அங்கமாய் தன்னையும் சேர்த்துக் கொள்கிறது.

-ஜாவிட் ரயிஸ்




Jawid Raiz Blogger
Latest post:
தாண்டிவந்த தடங்களில் சிலதையேனும் அழித்து விட முடியுமெனின் - இன்று தாங்கிக்கொண்டிருக்கும் வலிகளில் பாதியேனும் குறைந்திருக்கும்
www.tamilpoetry.com
  Like · Comment · Share என் மௌனம் பேச நினைக்கிறது page on Facebook     Like
 
Facebook Twitter LinkedIn Flickr YouTube
 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More