தொலைத்த கண்ணீரும், மீட்டெடுத்த சந்தோஷமும்




Diary
Page Number 2

நீண்டதொரு இடைவெளியின் பின்னர் என் நாளேட்டின் இரண்டாவது பக்கம் புரட்டப்படுகிறது. முதல் பக்கம் எழுதிய என்னில் இரண்டாம் பக்கத்துக்கு வருவதற்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. சுருக்கமாக சொன்னால், முதல் பக்கம் எழுதும் போது சோகம், கண்ணீர், இழப்புகள் என்பனவே என் வாழ்வின் உள்ளடக்கங்களாக இருந்தது. "ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது?", "ஏன் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்?" "ஏன் என்னால் மட்டும் முடியாதிருக்கிறது?" இந்த கேள்விகளை வைத்துக்கொண்டு குமுறிக்கொண்டிருந்த இதயம், தேடலில் தொலைத்த கண்ணீரையும் மீட்டெடுத்த சந்தோஷத்தையும் பற்றி பேசுகிறது இந்த பதிவு:


மழைக் குருவிகளுக்கு நிழலாய் உயரப் பரந்த மேகங்கள்,
குளிக்கப் போகும் களிப்பில் குதூகலிக்கும் மரங்கள்,
மௌனத்தின் சூழ்ச்சியில் மரணித்தாட்போல் உலகம், 
ஒப்பாரி வைக்க ஓரிரு காக்கை குழந்தைகள்.

    அழுதாலும் களித்தாலும் உலகம் அழகாய்த் தான் இருக்கிறது.என் உலகம் இவ்வளவு அழகானது எப்படி? கண்ணீர் உற்பத்தி செய்த இந்த கண்களில் இன்று சந்தோசம் குடிவந்ததெப்படி?

       முன்பெல்லாம்  அலுவலகம் போகும் வழியில் அழுக்கு உடையில் பழுத்த பிச்சைக்காரியின் புளித்த குரலில் என் நாட்கள் அழுக்காகிவிடுவதாக நினைப்பேன்.இன்று அவள் கைகளில் கண்மூடி சிரிக்கும் மழலையின் முறுவலில் ஆரம்பிக்கும் நாட்கள் மிகவும் அழகாக மாறுகிறது. தனிமை, வெறுமை என்று தவித்திருந்த இதயம் தனிமையிலும் இனிக்கிறது.முகவரியே தெரியாத வண்டுகளிடம் கற்பை பரிகொடுக்குதே என்று பூக்களை கண்டாலும் அசிங்கமாய் எண்ணிய உள்ளம் இப்போதெல்லாம்  பூக்களினதும் வண்டுகளினதும் சில்மிஷக் காதல் கண்டால்  பூரிக்கிறது. என்னை விரும்புவரை மட்டும் விரும்பிய  நெஞ்சம் எதிர்பவரையும் ஏற்றுக்கொள்கிறது.

எச்சமே இல்லாதபடி கருமை நீங்கியது.
எங்கும் வெள்ளை! 
அனைத்தும் புனிதம்! 
எதுவும் அழகு!

அலாவுதீனின் விளக்கில் உரசிக் கிடைத்ததல்ல, இந்த மகிழ்ச்சி.  "'சந்தோஷம்... துக்கம்... சோகம்... தனிமை... எல்லாவற்றையும் என் மனது தான் முடிவு செய்கிறது" . இந்த புரிந்துணர்வில் பிறந்தது தான் இவை அனைத்தும்.

"Being happy doesn't mean that everything is perfect. It means that you've decided to look beyond the imperfections."

"சந்தோஷம் என்பது எல்லாவற்றிலும் முழுநிறைவு அடைவது என்பதல்ல.  அது குறைகளுக்கு அப்பால் சிந்திக்க நினைக்கும் மன உறுதி"

அந்த உறுதி இப்பொழுது என் மனதுக்குள் குடிகொண்டு விட்டது. சிரிப்பு என்பது சந்தோஷம். ஆக, சிரிப்பை தேடி தொடங்கியது என் தேடல். அழுவதற்காக காரணம் தேடுவதை விட்டு சிரிப்பதற்காக காரணம் தேடினேன். "Be possitive, smile" என்று கையடக்க தொலைபேசியின் பின்னணி படத்தில் பொதித்து அடிக்கடி எனக்குள் நானே நினைவூட்டி கொண்டேன். என் வாழ்வில் நான் நினைத்திராத அளவு சந்தோஷமும், சிரிப்பதற்கான சந்தர்ப்பங்களும் இருப்பதை ஓரிரு மாதங்களுக்குள்  புரிந்துகொண்டேன்.

எனக்கு உற்சாகம் தரவும், ஆறுதல் சொல்லவும் என்னிலும் விஞ்சியவர்கள் யாருமில்லை என்பதை புரிந்துகொண்டேன். எனக்கு நானே ஆறுதல் சொன்னேன்.

நான் எல்லாவற்றிலும் பூரணமாகவில்லை. ஆனாலும் என் வாழ்வில் நிறையவே சந்தோஷம் இருக்கிறது.

உண்மையான நண்பனிடம் நட்பை ரசிக்கிறேன். 
முகமூடி போட்டுக்கொண்டவனிடம் நடிப்பை ரசிக்கிறேன். 

இலக்குகளுக்கான பாதையில் நடக்கிறேன். 
அடைய முடிந்தால் என் அடைவில் களிப்பேன்.
தடைகள் வருகையில் அனுபவப் பைக்கு உள்ளடக்கம் கிடைத்ததென்று களிப்பேன்.

என்னை துரத்தியடித்த விதியே... உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் துரத்து... நான் மீண்டும் திரும்புவேன் எனக்கே உரித்தான என் இலக்கை... என் வாழ்கையை தேடி.

-ஜாவிட் ரயிஸ்



Jawid Raiz Blogger
Latest post:
தாண்டிவந்த தடங்களில் சிலதையேனும் அழித்து விட முடியுமெனின் - இன்று தாங்கிக்கொண்டிருக்கும் வலிகளில் பாதியேனும் குறைந்திருக்கும்
www.tamilpoetry.com
  Like · Comment · Share என் மௌனம் பேச நினைக்கிறது page on Facebook     Like
Facebook Twitter LinkedIn Flickr YouTube
 


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More