புழுதி வரிகளுக்குள் ஒரு முல்லை.... [கவிதை] [விமர்சனம்]

T. ராஜேந்தரின் அடுக்கு வரிகளைப் போல் எதுகையும் மோனையும் சேர்த்து முப்பது வரிகளில் 'கவிதை' என்ற பெயரில் கட்டுரை எழுதிவிட்டு தன்னையும் ஒரு கவிஞன் என்று பறைசாற்றிக்கொண்டு திரிபவர்களின் புழுதி வரிகளுக்குள் அடக்கமாக ஒரு முல்லையை கண்டபோது பூரித்துப்போனேன்.
பிரியத்துக்குரிய எழுத்தாளர் "சேவியர்" ற்கு சொந்தமான முல்லை அது.

வரவேற்பாளர்


ஆடைகளில் சுருக்கம் விழாமல்,
உதடுகளின் சாயம்
உருகி வழியாமல்,
அலங்காரப் பதுமையாய்
வரவேற்பறையில் நான்.
தொலைபேசிச் சத்தம்
கேட்டுக் கேட்டு என்
காது மடல்கள் ஊமையாகிவிட்டன
போலியாய் சிரிப்பதற்காகவே
எனக்கு
ஊதிய உயர்வு
அவ்வப்போது வருகிறது.
கண்களில் கொஞ்சம்
காமம் கலந்தே
பாதி கண்கள் என்னைப் பார்க்கின்றன.
மீதி கண்கள்
அவசர யுகத்தின் பிரதிநிதிகள்
கடிகாரம் மட்டுமே பார்த்து வாழ்பவர்கள்.
என் குரலுக்குள்
குயில் இருக்கிறதாம் !
எனக்கு இருப்பவை தோகைகளாம் !
வர்ணனை வார்த்தைகளிலும்
புன்னகை மட்டுமே பூக்க வேண்டுமென்னும்
கட்டாயக் கட்டுகளில் நான்.
எனது சின்ன வயது மகள்
மாலையில் மறக்காமல்
மல்லிகை வாங்கி வரச் சொன்னாள்.
பூக்களின் வாசனைகளுக்கிடையே
என்
சராசரி வாழ்க்கையின் எதார்த்தம்
நாசி யை எட்டும் போது
முந்திக் கொண்டு தட்டுகிறது
மீண்டும் அந்த தொலைபேசி.
விரைவாய் மதிய உணவு முடித்து
கிடைக்கும் இடைவேளையில்
சிறிதே இளைப்பாறி
மீண்டும் உதடுகளில் புன்னகை நட்டு
முன்னறை வாசலில் தஞ்சம்.
அமிலச் சாலையில் கழுவப்பட்டு
மொத்த மனசும்
சாயம் போனதாய்த் தோன்றும்,
ஒவ்வொரு
மாலைப் பொழுதுகளிலும்.
சிரித்து வாழவேண்டும் என்று
கவிஞன் சொன்னது என்னிடம் தானோ ?
சிந்தனைகள் விட்டு விட்டு
வட்டமிட
கவலையாய் இருக்கிறது இப்போது.
மூன்று மணிக்கு பேசுகிறேன்
காலையில் கண்வலியுடன்
கணவன் சொன்னான்.
கடிகாரம் இலக்கைத் தொட்டபின்னும்
பயணத்தைத் தொடர,
இதுவரை ஒலித்த தொலைபேசி
இப்போது மட்டும் ஊமையாய் !
0

பெயர்ப்பலகைகளில் பெண்களை சிரிக்க வைத்த காலம் மாறி வரவேற்பறையில் கவர்ச்சிப்பதுமைகளாய் காட்சிப்படுத்துவதை, தமிழ் சாயம் குறையாமல் தன் வரிகளில் தெளித்திருக்கிறார் கவிஞர். 
ஒவ்வொரு வரிகளையும் விமர்சிக்கும் தேவையிருக்காது...






ஒற்றை வரியில் சொல்வதானால் கவிஞர்  பெண்மொழியில் யதார்த்தத்தை கண் முன் தோன்ற வைத்திருக்கிறார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More